08 டிசம்பர் 2025
தமிழ்நாடு, பட்டுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண
அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கியின், ‘வெளிப்பாடு விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான / பிற கட்டுப்பாடுகள் –கூட்டுறவு நகர வங்கிகள் (UCB)’ மற்றும் ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC)’ ஆகிய விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட சில உத்தரவுகளை கடைபிடிக்காததற்காகவும், வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 17இன் கீழுள்ள விதிகளை மீறியதற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), டிசம்பர் 05, 2025 தேதியிட்ட உத்தரவு மூலம், பட்டுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கி (வங்கி) மீது ₹1.50 லட்சம் (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47A(1)(c), அதனுடன் இணைந்து படிக்கப்படும் பிரிவுகள் 46(4)(i) மற்றும் 56 ஆகியவற்றின் கீழ் ஆர்பிஐக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விதிக்கப்பட்டது.
மார்ச் 31, 2024 தேதியில் வங்கியின் நிதி நிலை அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வைக் கண்டுபிடிப்புகள் அறிக்கையை ஆய்வு செய்ததில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் தனிப்பட்ட பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் பின்வரும் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது:
வங்கி
-
2023-24 ஆம் ஆண்டிற்கான தனது நிகர இலாபத்தில் 20 சதவிகிதத்தை சட்டபூர்வ இருப்பு நிதிக்கு மாற்றத் தவறியது;
-
பெயரளவு உறுப்பினர்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை வரம்பை விட அதிகமாக கடன்களை வழங்கியுள்ளது; மற்றும்
-
பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களின் KYC பதிவுகளை மத்திய KYC பதிவேட்டில் பதிவேற்றவில்லை.
இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது, வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.
(பிரிஜ் ராஜ்)
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2025-2026/1658 |