Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (172.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 19/08/2015
இந்திய ரிசர்வ் வங்கி, பட்டுவாடா வங்கிக்கான 11விண்ணப்பதாரர்களுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது

ஆகஸ்டு 19, 2015

இந்திய ரிசர்வ் வங்கி, பட்டுவாடா வங்கிக்கான 11விண்ணப்பதாரர்களுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது

பட்டுவாடா வங்கிகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து நவம்பர் 27, 2014 அன்று வெளிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி கீழ்க்கண்ட 11 விண்ணப்பதாரர்களுக்கு பட்டுவாடா வங்கிகள் நிறுவிட, கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திட இன்று முடிவு செய்துள்ளது.

  1. ஆதித்ய பிர்லா நுவோ லிட்.
  2. ஏர்டெல் எம் காமர்ஸ் சர்வீஸஸ் லிட்.
  3. சோழமண்டலம் டிஸ்ட்ரிபியூசன் சர்வீஸஸ் லிட்.
  4. அஞ்சல் துறை
  5. பினோ பே டெக் லிட்.
  6. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெப்பாசிட்டரி லிட்.
  7. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிட்.
  8. ஸ்ரீ திலீப் சாந்திலால் சங்க்வி
  9. ஸ்ரீ விஜய் ஷேகர் ஷர்மா
  10. டெக் மஹிந்திரா லிட்.
  11. வோடாபோன் எம்-பிசா லிட்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை பின்வருமாறு:

இந்திய ரிசர்வ் வங்கியின் மையமன்றக்குழு உறுப்பினரான முனைவர் நசிகேத் மோர் அவர்களின் தலைமையில் செயல்பட்ட ஒரு வெளி ஆலோசனைக் குழு (EAC) விரிவான ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வின் பரிந்துரைகள் ஆளுநர் மற்றும் நான்கு துணை ஆளுநர்கள் அடங்கிய “ உள்ளகத் தேர்வுக் குழு“ (ISC)-விற்குத் தகவல் அளிப்பதாக அமைந்தன. பின்னர், இந்த உள்ளகக் குழு தனித்தனியே விண்ணப்பங்களை அலசி ஆய்வு செய்து, மத்தியமன்றக்குழுவின் கமிட்டிக்கு (CCB) தனது இறுதிக் கட்டப் பரிந்துரைகளை அளித்தது. இந்தக் கமிட்டி ஆகஸ்ட் 19, 2015 அன்று தனது கூட்டத்தில், குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விண்ணப்பங்களைப் பார்வையிட்ட பின், அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தது.

இன்றைய வர்த்தக சூழலில் பட்டுவாடா வங்கி எனப்படும் புதிய வகையான வங்கி வர்த்தகம், எந்த வகையில் அமைவது வெற்றிகரமாக இருந்திடும் என்பதை இந்தத் தருணத்தில் யூகித்துக் கூறுவது கடினம் என்று, இந்த கடைசிக் கட்ட பட்டியலை அறிவிக்கும்போது, மத்தியமன்றக்குழுவின் கமிட்டி (CCB) தெரிவித்தது. முழு அளவிலான வங்கிச் சேவையில் ஈடுபடும் வங்கிகளைப்போல், அதே வகையான நேரிடர்களுக்கு இந்த பட்டுவாடா வங்கிகள் உள்ளாக நேரிடாது. காரணம், இந்த பட்டுவாடா வங்கிகள் கடன் கொடுக்கும் சேவைகளை மேற்கொள்ள முடியாது. ஆயினும் பட்டுவாடா வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட குறுகிய வங்கிச் சேவை முறைமைகளிலும் ஏற்கமுடியாத நேரிடர் விளைந்திடுமோ என்பதைக் கருத்தில்கொண்டு, விண்ணப்பதாரர்களை மத்தியமன்றக்குழுவின் கமிட்டி (CCB) மதிப்பீடு செய்தது. வெவ்வேறு துறைகளில், வெவ்வேறு செயல்பாடுகளில் திறமையுடன், அனுபவத்துடன் செயல்பட்டவர்களை இக்குழு தேர்வுசெய்துள்ளது. ஏனெனில், வெவ்வேறு மாதிரிகளில் அவர்கள் செயல்பட முயன்றிட இது வாய்ப்பளிக்கும். நாடெங்கிலும் உள்ள, இதுவரை வங்கிச் சேவையிலிருந்து விடுபட்ட வாடிக்கையாளர்களை சென்று சேரவும், அவர்களுக்கு வங்கி சேவையளிக்கத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிதிவலிமை உடையவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இருப்பார்கள் என்பதை மத்தியமன்றக்குழுவின் கமிட்டி (CCB) உறுதிப்படுத்திக்கொண்டது. ஆயினும், வழிகாட்டல் 15(v)-ல் குறிப்படப்பட்ட நிபந்தனைக்கும், செயல்பாட்டில் ஏற்படும் சூழலுக்கும் உட்பட்டே இந்த ஒப்புதல், கொள்கை அளவில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலில் கிடைக்கும் படிப்பினையைக் கொண்டு, வழிகாட்டுதல்களை தேவைப்படும் வகையில் திருத்தியமைத்து, சீராக மேன்மேலும், அதாவது எப்பொழுது வேண்டுமானாலும் உரிமம் அளிக்க இந்திய ரிசர்வ் வங்கி உத்தேசித்துள்ளது. முதல் கட்டமாக தேர்வு பெறாத விண்ணப்பதாரர்கள், பின்னர் வருங்காலத்தில் தேர்வு பெற்று உரிமம் பெறமுடியலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி நம்புகிறது.

பின்புலம்

இந்தியாவில் வங்கிகளின் வடிவமைப்பு – வருங்காலம் பற்றிய கண்ணோட்டம் என்பதைக் குறித்து விவாதத்திற்கான ஒரு கொள்கையை ஆகஸ்ட் 27, 2013 இந்திய ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் முன்வைத்தது. அந்த விவாதத்தின் முடிவாக, சில கருத்துரைகள் கிடைத்தன. தனித்தன்மையுள்ள வங்கி நடைமுறை இந்தியாவிற்குத் தேவை. ஆகவே, வெவ்வேறு விதமான உரிமம் அளிக்கும் கொள்கையைப் பின்பற்றுவது உசிதம். குறிப்பாக, உள்கட்டமைப்பிற்கு நிதியளிக்கும் வங்கி, மொத்த விரிவான வங்கி, சிறு அளவு வணிகம் செய்யும் வங்கி என்று வகைக்கேற்ப இது அமைக்கப்படலாம்.

அடுத்தகட்டமாக, சிறுவர்த்தகம் மற்றும் குறைந்த வருவாயுள்ள வீடுகளுக்கான நிதிச்சேவைகள் குறித்த ஒருங்கிணைத்த குழு (தலைமை Dr. நசிகேத் மோர்) தனது அறிக்கையை ஜனவரி
2014-ல் வெளியிட்டது. எங்கும் பரவிய கொடுப்புமுறைகளுக்கான நெட்வொர்க் இணைப்பு, சேமிப்பிற்கான பரந்த அணுகுமுறை வசதிகள், இவை குறித்த பிரச்சனைகளை இது அலசியது. இதுவரை வங்கிச் சேவையிலிருந்து விடுபட்ட பெருவாரியான இந்திய மக்களுக்கு இத்தகு நிதி சேவையளிக்கப் பட்டுவாடா வங்கிகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து பரிந்துரை செய்தது.

ஜூலை 10, 2014 அன்று யூனியன் பட்ஜெட் 2014–2015-ஐ சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் பின்வருமாறு அறிவித்தார்

“தற்போது உள்ள சட்டவடிவமைப்பில் தேவையான மாற்றங்களை செய்து, முழுஅளவிலான சர்வதேச வங்கிகளுக்குத் தனியார் துறையில் தொடர்ந்து செயல்பட அதிகாரமளிக்கும் ஒரு அமைப்பு முறை உருவாக்கப்படும். சிறிய வங்கிகள் மற்றும் பலவிதமான இதர வங்கிகளுக்கு உரிமம் அளிக்கும் ஒரு சட்ட உருவரையை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கிடும். தனித்துவமான சேவைகளை அளிக்கவும், பிராந்தியப் பகுதிகளுக்கு சேவைகள் பட்டுவாடா ஆகியவற்றிற்கான சிறப்பு வங்கிகள் உருவாகும். அவை, சிறுவணிகர்கள், முறைசாரா துறையினர், குறைந்த வருவாயுடையோர், விவசாயிகள், புலம்பெயரும் தொழிலாளர் ஆகியோருக்கு நிதிசேவையளிக்க இந்த வங்கிகள் உதவிடும்.“

ஜூலை 17, 2014, பட்டுவாடா வங்கிகள் உரிமம் குறித்த வழிகாட்டுதல்களின் கருத்துரு பொதுமக்களின் ஆலோசனைகளுக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. அதன்மீது கிடைத்த குறிப்புகள், ஆலோசனைகளின் அடிப்படையில் இறுதியான வழிகாட்டுதல்கள் நவம்பர் 27, 2014 அன்று வெளியிடப்பட்டது. மேலும், இவை குறித்து எழுந்த 144 கேள்விகளுக்கு விளக்கங்களையும், விடைகளையும் இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2015 அன்று வெளியிட்டது. பட்டுவாடா வங்கிகளுக்காக 41 விண்ணப்பங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் பெறப்பட்டன.

கொள்கை அளவிலான ஒப்புதல் குறித்த விரிவான விபரங்கள்

கொள்கை அளவிலான இந்த ஒப்புதல் 18 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இந்தக் காலகட்டத்தில், விண்ணப்பதாரர்கள் வழிகாட்டுதல்களில் கூறப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி விதிக்கும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திட வேண்டும். இந்த விண்ணப்பதாரர்களுக்குக் கொள்கை அளவில் அளிக்கப்பட்ட ஒப்புதலின் ஒரு அங்கமாக விதிக்கப்பட்ட இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துவிட்டார்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி திருப்தியடைந்துவிட்டால், வங்கிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1949-ன் சட்டப் பிரிவு 22(1)-ன்கீழ் வங்கி வர்த்தகத்தைத் தொடங்கும் உரிமம் அளித்திடக் கருதிடும். அத்தகைய வழக்கமான உரிமம் கிடைக்கும் வரை, விண்ணப்பதாரர்கள் எந்தவிதமான வங்கி வர்த்தகத்தையும் மேற்கொள்ளமுடியாது.

கூடுதலான விபரங்கள்

முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கத் தேவையான தகுதிகளைப் பரிசீலித்தபின், விண்ணப்பங்கள் இதற்காக அமைக்கப்பட்ட, வெளி ஆலோசனைக் குழு (EAC)-விற்கு அனுப்பப்படும் என்று வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பங்களைத் தேர்வு செய்யவும், வழிகாட்டுதல்களின்படி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வோருக்கு மட்டுமே உரிமம் வழங்கவும் பிப்ரவரி 4, 2015 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியமன்றக்குழு உறுப்பினர் Dr. நசிகேத் மோர் அவர்கள் தலைமையில், வெளி ஆலோசனைக் குழு (EAC) ஒன்று அமைக்கப்பட்டது. வெளி ஆலோசனைக் குழு (EAC)வின் 3 உறுப்பினர்கள் - Ms. ரூபா குட்வா (CRISIL LTD. முன்னாள் MD & CEO) Ms. சுபலக்ஷ்மி பான்ஸே (முன்னாள் தலைவர், அலகாபாத் வங்கி), மற்றும் Dr. தீபக் பதக், Chair professor, IIT, மும்பை. ரூபா குட்வா கமிட்டியிலிருந்து விலக நேரிட்டதால், இந்திய ரிசர்வ் வங்கி மே 2015-ல் திரு.நரேஷ் டக்கர் (MD & Group CEO, ICRA) அவர்களை உறுப்பினராக நியமித்தது.

வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டதை ஒட்டி, விண்ணப்பங்களைத் தெரிவு செய்ய, (தேவைப்பட்டால் மேலும் தகவல் கேட்பது உட்பட) வெளி ஆலோசனைக் குழு (EAC), தான் பின்பற்றும் செயல்முறைகளைத் தானே வரையறுத்துக் கொண்டது. விண்ணப்பதாரரின் நிதிநிலைமை முதலில் ஆய்வு செய்யப்பட்டது. நிறுவனத்தை ஆதரவளித்துத் தொடங்குபவர் மற்றும் அவர் சார்ந்த குழுமங்களின் கடந்த 5 ஆண்டுகால நிதிநிலைமை ஆய்வுசெய்யப்படும். இது மட்டுமின்றி நிறுவனத்தின் மேலாண்மை சரியாக உள்ளதா? வலிமையும், நேர்மையும் இணைந்ததாக அது உள்ளதா? இது குறித்த அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை கூறுவது என்ன? விதிமுறைகள், சட்டதிட்டங்களை அவை அடிக்கடி வேண்டுமென்றே மீறிய நிகழ்வுகள் நடந்துள்ளனவா என்பவை கவனிக்கப்படும். கிராமப்புறப் பகுதிகளை சென்றடைந்து வர்த்தக சேவை செய்தமைக்காக குறிப்பிடத்தக்கவிதத்தில் எடுத்துக்காட்டுமளவிற்கு அந்நிறுவனம் செயல்பட்டுள்ளதா? புதுயுத்திகளைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் ஆர்வம், பெருத்த அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் பணத்தை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் கையாளக்கூடிய திறன், பல்வகைப் பொருட்கள்/ சேவைகளை இணைத்து அளிக்கும் வர்த்தகத் திட்டம், புதுவிதமான தொழில்நுட்பத் தீர்வுகள், பரந்துபட்ட இடங்களை அணுகும் திறன், லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகத் திட்டம் இவை அனைத்தையும் சாதித்துக் காட்டவல்ல தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் செயல்திறன் உடைய வர்த்தக மாதிரி அமைப்பினை விண்ணப்பதாரர் அளிக்கவல்லவரா என்பது ஆராயப்படும். மக்களைச் சென்று சேரும் திறன் மற்றும் குறைந்த மதிப்புடைய அதிக அளவிலான பரிவர்த்தனைகளைக் கையாளும் திறனை மதிப்பீடு செய்திட, மேலும் சில தகவல்கள் விண்ணப்பதார்ர்களிடம் கோரப்பட்டன. இவை அனைத்தின் அடிப்படையில், வெளி ஆலோசனைக் குழு (EAC) முடிவுகளை எடுத்தது. வெளி ஆலோசனைக் குழு (EAC) தனது அறிக்கையை ஜூலை 6, 2015 அன்று சமர்ப்பித்தது.

அல்பனா கில்லவாலா
முதன்மைத் தலைமைப் பொது மேலாளர்

PRESS RELEASE: 2015 – 2016 / 437

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்