Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (152.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 06/07/2017
வாடிக்கையாளர் பாதுகாப்பு – அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கிப் பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களின் பொறுப்புகளைக் குறைத்தல்

அறிவிப்பு எண் 15
Ref.No.DBR.Leg.BC.78/09.07.005/2017-18

ஜூலை 06, 2017

அனைத்துப் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட)
அனைத்து சிறு நிதி வங்கிகள் மற்றும் செலுத்துகை வங்கிகள்

அன்புடையீர்

வாடிக்கையாளர் பாதுகாப்பு – அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கிப்
பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களின் பொறுப்புகளைக் குறைத்தல்

மோசடி மற்றும் பிற பரிவர்த்தனைகளினால் கணக்கிலிருந்து பணம் தவறாகக் கழிக்கப்படுவதை (பற்றுகளை) திருத்துவது பற்றிய எங்கள் ஏப்ரல் 08, 2002 தேதியிட்ட சுற்றறிக்கை Circular DBOD.Leg.BC.86/09.07.007/2001-02-ஐப் பார்க்கவும்.

2. நிதிச் சேர்க்கை மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் அதிகமான முக்கியத்துவம் மற்றும் அங்கீகாரமற்ற பரிவர்த்தனைகளால் கணக்குகள் / அட்டைகள் மீதான தவறான பற்றுகள் தொடர்புடைய வாடிக்கையாளர் புகார்கள் சமீபத்தில் மிகவேகமாக அதிகரித்துள்ள சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தச் சூழ்நிலைகளில் வாடிக்கையாளரின் பொறுப்புகளை நிர்ணயிக்கும் அளவுகோல்கள் மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் திருத்தப்பட்ட உத்தரவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை வலுப்படுத்துதல்

3. மின்னணு வங்கி பரிவர்த்தனைகள் பொதுவாக, இரண்டு பிரிவாக உள்ளன.

  1. தொலைதூர / ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் (பரிவர்த்தனை செய்யப்படும் இடத்தில் நேரடியாக உபகரணங்கள் – உ-ம் காசோலையாகவோ வரையோலையாகவோ தேவைப்படாத பரிவர்த்தனைகள். உ-ம். இணைய வங்கி, மொபைல் வங்கி, அட்டை இல்லா வங்கி (CNP) பரிவர்த்தனைகள், முன்னரே பணம் செலுத்தப்பட்ட உபகரணங்கள் (PPI)

  2. நேரடியான / அருகில் உபகரணங்கள் கைவசம் இருந்து செய்யும் பணப் பரிவர்த்தனைகள், (பரிவர்த்தனை செய்யும் போது உபகரணங்கள் (Physical Payment Instruments) அட்டை / செல்லிடைப்பேசி முதலியவைகள் நேரிடையாகத் தேவைப்படும் வகையில்அமைந்த பரிவர்த்தனைகள். உ-ம். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM), விற்பனை மையம் (POS) ஆகியவை.

4. மின்னணு வங்கியியல் பர்வர்த்தனை கையாளும்போது வங்கிகளில் உள்ள அமைப்பு மற்றும் நடைமுறைகள், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக உணரும்படி வடிவமைக்கப்படவேண்டும். இந்த நோக்கத்தை அடைய வங்கிகள் பின்பற்ற வேண்டுபவையாவன –

  1. மின்னணு வங்கியியல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உணர்வை உறுதிசெய்யும் அமைப்பு மற்றும் நடைமுறைகள்.

  2. வலுவான மற்றும் சக்தி வாய்ந்த மோசடி கண்டறியும் மற்றும் தடுக்கும் தொழில் நுட்ப அமைப்பு.

  3. அங்கீகாரமற்ற பரிவர்த்தனைகளால் ஏற்படும் நேரிடர்களை (உதாரணமாக -வங்கியின் தற்போதைய அமைப்புகளில் உள்ள இடைவெளிகள்) மதிப்பிடுவதற்கான இயங்குமுறை. மேலும், அத்தகைய நிகழ்வுகளிலிருந்து ஏற்படும் பொறுப்புகளை அளவிடுதல்.

  4. நேரிடர்களைத் தடுக்கவும், அத்தகைய நிகழ்வுகளினால் எழும் பொறுப்புகளுக்கு எதிராகத் தங்களை பாதுகாக்கவும் பொருத்தமான நடவடிக்கைகள்.

  5. மின்னணு வங்கியியல் மற்றும் பணப் பரிவர்த்தனை மோசடிகளில் இருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்ளுவது என்பது குறித்து தொடர்ச்சியாகவும், திரும்பத் திரும்பவும் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் முறை.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பற்றி வாடிக்கையாளர்கள் வங்கிக்குத் தெரிவித்தல்

5. மின்னணு வங்கியியல் பரிவரித்தனைகளின் பொருட்டு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ) விழிப்பூட்டல்களுக்கு கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ள வற்புறுத்தவேண்டும். குறுஞ்செய்தி எச்சரிக்கைள் கட்டாயமாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில், மின்னஞ்சல் எச்சரிக்கை அனுப்பப்படலாம். அங்கீகாரமில்லாத மின்னணு வங்கிப் பரிவர்த்தனை நிகழ்ந்தால், அத்தகைய பரிவர்த்தனைபற்றி உடனடியாக, வங்கிக்கு அறிவிக்க வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படவேண்டும். மேலும், வங்கிக்கு அறிவிப்பது தாமதமானால், அதனால் அதிகபட்ச இழப்பு, வங்கி / வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நேரிடர் உள்ளது என்றும் வலியுறுத்தவேண்டும். இந்த வசதிக்காக அங்கீகரமில்லாத பரிமாற்றங்கள் நிகழ்ந்தால், பணம் செலுத்தும் கருவிகள் தொலைந்து போனால் அல்லது திருட்டு ஏற்பட்டால், அதைப் பதிவு செய்வதற்காக வங்கிகள் பல சேனல்கள் மூலம் (குறைந்தபட்சம் இணையம், தொலைபேசி வாயிலாக, வங்கியின் குறுஞ்செயதி, மின்னஞ்சல், IVR வசதிகள், ஓர் பிரத்யேக கட்டணமில்லாத தொலைபேசி உதவி மையம், கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அறிக்கை சமர்ப்பித்தல் போன்ற) 24 X 7 அணுகிட வசதிகளை வழங்கவேண்டும். வாடிக்கையாளர் அங்கீகரமில்லாத பரிமாற்றங்கள் பற்றிய தகவலோ எந்தவொரு பதிலோ / ஆட்சேபணையோ தெரிவிக்க விரும்பினால், வலைப் பக்கத்திற்கான அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தேடத் தேவையின்றி, பெறுகின்ற குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் எச்சரிக்கைகளுக்குப் ‘பதில்’ என்ற பதிவிலிருந்தே தகவலளிப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் தகவல்தொடர்பு அமைப்பை செயல்படுத்த வேண்டும். மேலும், முறைகேடான பரிவர்த்தனைகளைப் பற்றிய புகார்களைக் குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கும் வசதிக்காக, வாடிக்கையாளருடன் ஒரு நேரடி இணைப்பு வங்கியின் இணையதளத்தில் முதல் பக்கத்தில் கொடுக்கப்படவேண்டும். இழப்பு / மோசடி அறிக்கை முறையில், புகாரைப் பெற்று பதிவு செய்யப்பட்ட புகார் எண்ணுடன், புகார் அனுப்பும் வாடிக்கையார்களுக்கு உடனடி பதில் (தானியங்கி மறுமொழி உட்பட) அனுப்பும் முறையை செயல்படுத்தவேண்டும். செய்திகளை அனுப்பவும், பெறவும் வங்கிகளால் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு முறைமை, செய்தியினைப் பெறும் / வழங்கும் நேரத்தையும் தேதியையும் பதிவு செய்யவேண்டும். மற்றும் வாடிக்கையாளரின் பதில் ஏதேனும் இருந்தால், அதற்கும் நேரம் / தேதிப் பதிவு இருக்கும்படி செய்யவேண்டும். இந்த செயல் வாடிக்கையாளரின் இழப்புப் பொறுப்பை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் உடையது. தங்கள் செல்லிடைப்பேசி எண்கள் கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு, ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர, வேறு எந்த மின்னணு பரிவர்த்தனைகளின் வசதிகளையும் வங்கிகள் வழங்காது. அங்கீகாரமற்ற பரிவர்த்தனை பற்றிய அறிக்கையை வாடிக்கையாளரிடமிருந்து பெற்றவுடன், வங்கி அந்தக் கணக்கில் மேலும் மோசடி பரிவர்த்தனைகள் நடைபெறுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுப்பது கட்டாயமாகும்.

6. வாடிக்கையாளரின் வரையறுக்கப்பட்ட பொறுப்பு

(a) வாடிக்கையாளரின் பொறுப்பேதும் இல்லை.

கீழ்க்கண்ட அங்கீகராமற்ற பரிவர்த்தனை நிகழ்வுகளில் வாடிக்கையாளர் பொறுப்பாகமாட்டார்.

  1. வங்கியின் தரப்பில் மோசடியில் பங்களிப்பு / அலட்சியம் / செயல்பாட்டில் குறைபாடு (பரிவர்த்தனை வாடிக்கையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல்)

  2. மூன்றாவது மனிதரின் / தரப்பில் அத்து மீறல் – அதாவது குறை வங்கியிடமோ, வாடிக்கையாளரிடமோ இல்லை. அந்த வங்கி அமைப்பு முறையில் எங்கேனும் குறை இருந்தாலும், வாடிக்கையாளர் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை தொடர்பாக வங்கியிடமிருந்து தகவல் கிடைத்த 3 வேலை நாட்களுக்குள் வங்கிக்கு அறிவித்திருக்க வேண்டும்.

(b) ஒரு வாடிக்கையாளரின் வரையறுக்கப்பட்ட பொறுப்பு

7. அங்கீகாரமற்ற பரிவர்த்தனைகளினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஒரு வாடிக்கையாளர் பின்வரும் நிகழ்வுகளில் பொறுப்பாகிறார்.

  1. வாடிக்கையாளரின் அலட்சியத்தால் இழப்பு ஏற்பட்டால், அதாவது பரிவர்த்தனை சார்ந்த சான்றுகளை யாரிடமாவது பகிர்ந்து கொண்டிருந்தால், மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் தெரிவிக்காத வரையில் வாடிக்கையாளர் முழுமையான இழப்பிற்கு பொறுப்பாகிறார். இதை அறி வித்த பிறகு ஏற்படும் எந்த இழப்பிற்கும் வங்கியே பொறுப்பேற்கும்.

  2. மோசடி மின்னணு பரிவர்த்தனை நிகழ்வுகளில் வங்கியோ அல்லது வாடிக்கையாளரோ பொறுப்பாகாமல், எங்கோ அந்த மின்னணு பர்வர்த்தனையில் பழுது இருக்கக்கூடும். அப்போது வங்கிக்கு வாடிக்கையாளர் இதை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டால் (வங்கியிடமிருந்து தகவல்பெற்ற பின் 4 முதல் 7 வேலை நாட்கள்) வாடிக்கையாளரின் பரிவர்த்தனை பொறுப்பு, பரிவர்த்தனை மதிப்பு அல்லது அட்டவணை 1 இல் குறிப்பிட்ட தொகை (எது குறைவோ அது) அந்த அளவில் மட்டுமே இருக்கும்.

அட்டவணை – 1
பாரா 7 (ii)-ன்படி ஒரு வாடிக்கையாளரின் அதிகபட்ச வரம்பு பொறுப்பு
கணக்கு வகை அதிகபட்சப் பொறுப்பு ரூபாய்
  • BSBD கணக்கு
5,000
  • பிற சேமிப்பு வங்கிக் கணக்குகள்
  • முன்பணம் செலுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பரிசு அட்டைகள்
  • MSME-க்களின் நடப்பு / பணக்கடன் / இருப்புக்குமேல் எடுக்கும் கடன் வசதி - ஓவர்டிராஃப்ட் கணக்கு
  • மோசடி நடப்பதற்கு முன்னதான 365 நாட்கள் காலகட்டத்தில் ரூ. 25 லட்சம் வரை வருடாந்திர சராசரி இருப்புநிலை கொண்ட தனி நபர்களின் நடப்பு / பணக்கடன் / ஓவர்டிராஃப்ட் கணக்குகள்
  • ரூ. 5 லட்சம் வரை வரம்புள்ள கடன் அட்டைகள்
10,000
  • மற்ற நடப்பு / பணக்கடன் / ஓவர்டிராஃப்ட் கணக்குகள்
  • ரூ. 5 லட்சத்திற்கு மேலுள்ள கடன் அட்டை
25,000

மேலும், மோசடிப் பரிவர்த்தனைகளைப் பற்றி 7 நாட்களுக்கு மேல் தாமதமாக வங்கிக்கு அறிவிப்பு செய்தால், வாடிக்கையாளரின் பொறுப்பு வங்கி நிர்வாக மன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொள்கைப்படி தீர்மானிக்கப்படும். வங்கிகள், இந்த உத்தரவுகளைப் பின்பற்றும் விதமாக வாடிக்கையாளரின் பொறுப்பு தொடர்பாக, கணக்குகள் தொடங்கும்போது அவர்களது கொள்கையின் விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும். மேலும், வங்கிகள் எல்லோருக்கும் சென்றடையும்படி, தங்களின் நிர்வாக மன்றம் ஒப்புதல் அளித்துள்ள கொள்கைகளைப் பொதுமக்கள் பார்வைத் தளத்தில் வைக்கவேண்டும். தற்போதுள்ள வாடிக்கையாளர்களும் தனித்தனியாக வங்கியின் கொள்கைகளை அறியும்படி தகவல் கொடுக்கவேண்டும்.

8. பாரா 6 (ii) மற்றும் பாரா 7 (ii) – களில் குறிப்பிடப்பட்டது போல் குறைபாடுகள் / விதிமீறல்கள் வங்கியிடமோ, வாடிக்கையாளரிடமோ இல்லாமல், அமைப்பில் வேறெங்கோ, மூன்றாம் தரப்பு சார்ந்ததாக உள்ள மோசடி நிகழ்வுகளில், வாடிக்கையாளரின் பரிவர்த்தனை பொறுப்பு சுருக்கமாக அட்டவணை-2 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்டவணை – 2
சுருக்கமாக வாடிக்கையாளரின் பொறுப்பு
மோசடி பரிவர்த்தனைகளை பற்றித் (தகவல் பெறும் தேதியில் இருந்து) தெரிவிக்க எடுக்கும் நேரம் வாடிக்கையாளரின் பொறுப்பு
மூன்று வேலை நாட்களுக்குள் பொறுப்பாகமாட்டார்
4 லிருந்து 7 வேலை நாட்களுக்குள் பரிவர்த்தனை மதிப்பு அல்லது அட்டவணை – 1 ல் காணப்படும் தொகை இதில் எது குறைவோ அது
7 வேலை நாட்களுக்கும் மேல் வங்கி நிர்வாக மன்றக் குழுவின் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொள்கைப்படி

அட்டவணை 2 ல் காணப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கை, (தகவல் பெறும் தேதியைத் தவிர்த்து) வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள கிளைக்கான வேலைநாட்கள் அட்டவணையின்படி கணக்கிடப்படும்.

பொறுப்புகளில்லாத / வரம்புகளுக்குட்பட்ட பொறுப்புகள் தொடர்பான நிகழ்வுகளில் கணக்கில் மாற்று வரவு வைக்க காலக்கெடு

9. அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர் வங்கிக்கு அறிவித்த பின், அதற்குரிய தொகையை வாடிக்கையாளரின் கணக்கில், அவ்வாறு அறிவிப்புச் செய்த நாளிலிருந்து 10 வேலை நாட்களுக்குள் (காப்பீட்டு உரிமை கோரல் தீர்வுக்குக் காத்திராமல்) வங்கி வரவு வைத்திடவேண்டும். மோசடி மின்னணு வங்கி பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்கள் அலட்சியத்தால் ஏற்பட்டாலும் கூட, வங்கிகள் தங்கள் விருப்பப்படி எந்த வாடிக்கையாளர் பொறுப்பையும் தள்ளுபடி செய்யத் தீர்மானிக்கலாம். வங்கி வரவு வைப்பதற்கான தேதி என்பது மோசடி பரிவர்த்தனை நடந்த அதே தேதியாகும்.

10. மேலும், வங்கிகள் பின்வருவனவற்றை உறுதிசெய்யவேண்டும்

  1. புகார் பெறப்பட்டு வங்கியின் நிர்வாக மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொள்கையில் குறிப்பிடப்பட்ட நாட்களுக்குள் (90 நாட்களுக்கு மிகாமல்) புகாருக்குத் தீர்வு காணப்பட்டு, வாடிக்கையாளரின் பொறுப்பும் நிர்ணயிக்கப்பட்டால், மேற்குறிப்பிட்ட பாரா 6-லிருந்து 9 வரையில் கூறியுள்ளபடி வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும்.

  2. புகார் அளிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் புகாரை தீர்க்க முடியாவிட்டாலோ, வாடிக்கையாளரின் பொறுப்பை நிரூபிக்க முடியவில்லையென்றாலோ, பாரா 6-லிருந்து 9 வரை கூறப்பட்டுள்ள இழப்பீடு வாடிக்கையாளருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

  3. பற்று அட்டை / வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர் வட்டியை இழப்பதில்லை என்பதும், கடன் அட்டை கணக்குகளில் வாடிக்கையாளர் எந்தவொரு கூடுதல் வட்டிச் சுமையையும் பெறவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வாடிக்கையாளர் பாதுகாப்புக் கொள்கை

11. வாடிக்கையாளர் / வங்கியின் அலட்சியம் , வங்கி அமைப்பு மோசடி / மூன்றாம் தரப்பினரின் முறைகேடுகள் ஆகியவற்றால் ஏற்படும் அங்கீகரிக்கப்படாத பற்றுகளால் (Debits) எழும் நேரிடர்களை கவனத்தில் கொண்டு, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளால் எழும் வாடிக்கையாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை வங்கிகள் தெளிவாக வரையறுக்க வேண்டும். வங்கிகள் நிர்வாக மன்றத்தின் ஒப்புதலோடு, வாடிக்கையாளர் தொடர்புக்கான கொள்கையைப் பின்வரும் வகையில் உருவாக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம். மின்னணு வங்கியியலில் பரிவர்த்தனைகளில் நேரிடர் மற்றும் பொறுப்புகள், மேலும் அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் பொறுப்புகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு முறைமை உட்பட, வாடிக்கையாளர் பாதுகாப்பு குறித்த அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வண்ணம் இக்கொள்கை அமைந்திருக்கும். இந்தக் கொள்கை வெளிப்படைத்தன்மையுடன், பாகுபாடின்றி, அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கியியல் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளருக்கு இழப்பீடு அளிப்பதையும், அதற்கான மேலே உள்ள பாரா 10-ல் உள்ள வழிமுறைகளின்படி அத்தகைய இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கான காலக் கெடுவைப் பரிந்துரைக்கவும் வேண்டும். புகார் தீர்வுமுறை / புகார் அடுத்த நிலைக்கு செல்லுதல் / விரிவாக்க முறை விவரங்களுடன் இந்தக் கொள்கை வங்கியின் இணையதளத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். இந்த சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்கள் கொள்கையில் இணைக்கப்படும்.

நிரூபிக்கும் பொறுப்பு

12. அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கியியல் பரிவர்த்தனையில், வாடிக்கையாளரின் பொறுப்பை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் பொறுப்பு வங்கியையே சாரும்.

அறிக்கை மற்றும் கண்காணிப்பு

13. நிர்வாக மன்றம் அல்லது அதன் குழுவிடம் வாடிக்கையாளர் பொறுப்பு சார்ந்த நிகழ்வுகளை அறிவிக்கும் ஒரு அமைப்பையும், முறைமையையும் வங்கிகள் உருவாக்கிட வேண்டும். வெவ்வேறு வகைசார்ந்த (உதாரணம்:- அட்டையை நேரில் அளித்துச் செய்யப்படும் பரிவர்த்தனைகள், அட்டை இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனைகள், இணைய வங்கி, மொபைல் வங்கி பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிவர்த்தனைகள்) பரிவர்த்தனைகளின் பல்வேறு விதமாக நிகழ்ந்துள்ளனவற்றின் எண்ணிக்கை, தொகை ஆகியவை அறிக்கையில் குறிப்பிடப்படவேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் உள்ள நிலைக்குழு, வாடிக்கையாளர்களால் புகார் செய்யப்பட்ட அல்லது வேறுவிதமாக அறிந்த மோசடி மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகள் மேலும் அவற்றிற்காக எடுக்கப்பட்ட தீர்வுகள், அவற்றை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட பொருத்தமான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அவ்வப்போது மறுஆய்வு செய்திடும். இத்தகைய எல்லா பரிவர்த்தனைகளும் வங்கியின் உள்ளகத் தணிக்கையாளர்களால் பரிசீலனை செய்யப்படும்.

14. வங்கிகளின் கடன் அட்டை, பற்று அட்டை, இணைவர்த்தக ரூபாய் நாணய கூட்டு வர்த்தகம் சார்ந்த முன்னரே பணம் செலுத்தப்பட்ட அட்டை நடவடிக்கைகள், கடன் அட்டை வழங்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து, ஜூலை 01, 2015 தேதியிட்ட Master Circular DBR No.FSD.BC.18/24.01.009/2015-16 சுற்றறிக்கையிலுள்ள அறிவுறுத்தலகளைப் புறந்தள்ளி, இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்கள் இணைப்பிலுள்ளவாறு அமலில் இருக்கும்.

இங்ஙனம் ஒப்பம்

(பிரகாஷ் பலியார்சிங்)
தலைமைப் பொதுமேலாளர்


இணைப்பு

வங்கிகளின் கடன் அட்டை, பற்று அட்டை, இணைவர்த்தக ரூபாய் நாணய கூட்டு வர்த்தகம் சார்ந்த முன்னரே பணம் செலுத்தப்பட்ட அட்டை நடவடிக்கைகள், கடன் அட்டை வழங்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து, ஜூலை 01, 2015 தேதியிட்ட Master Circular DBR No.FSD.BC.18/24.01.009/2015-16 சுற்றறிக்கையிலுள்ள அறிவுறுத்தல்கள் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளைப் பொறுத்தவரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வரிசை எண் தற்போதைய அறிவுறுத்தல்கள் இந்த சுற்றறிக்கையில் மாற்றப்பட்ட அறிவுறுத்தல்கள்
(பாரா எண்)
  பாரா எண் அறிவுறுத்தல்கள்  
1 1.14.1 மோசடியை எதிர்க்கவும், மோசடிகளைத் தடுக்க சட்டங்கள் வகுத்து அவற்றைக் கட்டுப்படுத்தி அமலாக்கம் செய்யும் மோசடித் தடுப்புக் குழுக்கள் / செயலாக்கப் படைகளில் முனைப்புடன் பங்கேற்கும் உள்ளகக் கட்டுப்பாட்டு அமைப்புகளை வங்கிகள் / வங்கிசாரா நிதிநிறுவனங்கள் உருவாக்கவேண்டும். 4
2 II.7. (viii) (c) 7. வாடிக்கையாளர்களுக்கு அட்டைகள் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் –
  • இழப்பு அல்லது திருட்டு அல்லது கார்டை நகலெடுத்தோ அல்லது வேறு வகையிலோ மாற்றாளி அதைப் பயன்படுத்தும் நிலை

  • எந்தவொரு அங்கீகாரமற்ற பரிவர்த்தனை அட்டைதாரர்களின் கணக்கில் பதிவு செய்யப்படும் நிலை

  • அந்த வங்கிக் கணக்கை பராமரிப்பதில் ஏதேனும் பிழை அல்லது முறைகேடான நிலை

மேற்கண்ட நிலை / நிகழ்வுகளை அட்டைதாரர் அறிந்தவுடன் உடனடியாக வங்கிக்கு அவற்றைத் தெரிவிக்கும் கடமைக்கு அவரை உட்படுத்தும் வகையில் அமைந்த நிபந்தனைகள் (viii) (c).
5
3 II.7 (viii) (d) (viii) (d). இத்தகைய அறிவிப்பை அளித்திட ஒரு தொடர்பு உதவி மையம். இத்தகைய அறிவிப்பு, பகலோ இரவோ எந்த நேரத்திலும் செய்யப்படலாம். 5
4 II. 7 (x) வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள கனிணி செயலிழப்பினால், கடன் அட்டை வைத்திருப்பவருக்கு ஏற்படும் நேரடி இழப்புகளுக்கு வங்கி பொறுப்பேற்க வேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்படவேண்டும். எனினும், பணப் பட்டுவாடாத் தீர்வு முறையில், தொழில் நுட்பத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, அது ஒரு செய்தியாக அல்லது காட்சியாக வாடிக்கையாளர் அறிந்துகொள்ளும்படியாக இருந்தால், இத்தகு தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படும் இழப்புக்கு வங்கி பொறுப்பேற்க முடியாது. ஒரு பரிவர்த்தனை நிறைவேற்றப்படா விட்டாலோ அல்லது தவறாக நிறைவேற்றப் பட்டாலோ, அதற்கான வங்கிப் பொறுப்பின் அளவு என்பது விதிமுறைகளை நிர்வகிக்கும் சட்டத்தின் ஷரத்துக்களுக்கு உட்பட்டு, அந்தப் பரிவர்த்தனையின் அசல் மற்றும் வட்டித் தொகையே ஆகும். 6 மற்றும் 7
5 II. 9 (i) பற்று அட்டையின் முழு பாதுகாப்பையும் வங்கி உறுதி செய்யவேண்டும். பற்று அட்டையின் பாதுகாப்பு வங்கியையே சாரும். பாதுகாப்பு மீறல் அல்லது பாதுகாப்பு முறைமையின் தோல்விகளால் ஏற்படும் இழப்புகளுக்கு வங்கியே பொறுப்பேற்கும் 4, 6 மற்றும் 7
6 II. 9 (iv) iv) அட்டை வைத்திருப்பவர், தெரிந்தே மோசடி செய்தால் அல்லது தீவிர அலட்சியத்துடன் செயல்பட்டாலன்றி, திருட்டு / இழப்பு / அட்டையின் வழிவகைகளை நகலெடுப்பதினால் ஏற்படும் இழப்புகளை வங்கிக்குத் தெரிவிக்கும் வரை, ஒரு குறிப்பிட்ட அளவு (ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது அட்டைதாரரும் வங்கியும் முன்கூட்டியே ஒப்புக்கொண்ட பரிவர்த்தனையின் சதவீதப்படியோ) இழப்பிற்குப் பொறுப்பேற்பார். 6 மற்றும் 7
7 II. 9 (v) ஒவ்வொரு வங்கியும் அதன் வாடிக்கையாளர் அவர்களுக்கு ஏற்படும் அட்டை இழப்பு / திருட்டு அல்லது பணம் செலுத்தும் சாதனங்களை நகலெடுத்தல் மூலம் ஏற்படும் இழப்புகளை, பகலோ இரவோ எந்த நேரத்திலும் வங்கிக்கு அறிவிக்கும் வகையில் வழிமுறைகளை வழங்க வேண்டும். 5
8. II. 9 (vi) வாடிக்கையாளரின் அட்டை இழப்பு / திருட்டு அல்லது பணம் செலுத்தும் சாதனங்களை நகலெடுத்தல் குறித்த அறிவிப்பு கிடைத்தவுடன், அட்டையின் எந்தவொரு பயன்பாட்டையும் உடனடியாகத் தடுக்க வங்கி அனைத்து நடவடிக்கையும் எடுக்கவேண்டும். 5
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்