Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (379.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 22/10/2015
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015

RBI/2015-16/211
Master Direction No.DBR.IBD.No.45/23.67.003/2015-16

அக்டோபர் 22, 2015

அன்புடையீர்

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015

வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 35 (A)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பிரயோகிக்கும் விதமாகவும், செப்டம்பர் 15, 2015 தேதியிட்ட F. No. 20/6/2015-FT அறிவிக்கப்பட்ட “தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்“ குறித்த மத்திய அரசின் அறிவிப்பை ஒட்டியும் பொதுநலன் கருதி இவ்வாறு செயல்படுவது சரியென்று திருப்தியடைந்தால், இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கும் (ஊரக வங்கிகள் நீங்கலாக) பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

பகுதி – I
தொடக்கநிலை

1.1 நோக்கம்

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் (GMS) என்பது நடப்பிலுள்ள GDS தங்க வைப்புத் திட்டம் GML (தங்க உலோக கடன் திட்டம்) ஆகியவற்றை திருத்தியமைப்பதாக உள்ளது. வீடுகளிலும், நிறுவனங்களிலும் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை வெளிக் கொணர்ந்து, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக அதைப் பயன்படுத்தி, நாளடைவில் தங்கத்தின் இறக்குமதியைக் குறைத்தல்.

1.2 தலைப்பு மற்றும் தொடக்கம்

i. இந்த வழிகாட்டுதல் இந்திய ரிசர்வ் வங்கி (தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்) வழிகாட்டுதல் 2015 என்று அழைக்கப்படும்.

ii. அனைத்து வணிக வங்கிகள் (ஊரக வங்கிகள் நீங்கலாக) இத்திட்டத்தை அமல்படுத்தத் தகுதியுடையவர்கள்.

iii. இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பிடும் வங்கிகள், இதற்கான ஒரு உள்ளடக்கிய கொள்கையை வகுத்து அதை அமல்படுத்த வங்கி நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

1.3 விளக்கங்கள்

இந்த வழிகாட்டுதலில், சூழலினால் வேறுவிதமாகப் பொருள் கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டாலன்றி, பின்வரும் சொற்றொடர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருளிலேயே அறியப்படும்.

  1. சேகரிப்பு மற்றும் தூய்மை பரிசோதனை மையம்:– சேகரித்துத் தூய்மை பரிசோதனை செய்யும் மையங்களாக ப்யூரோ ஆப் இந்தியன் ஸ்டேன்டர்ட்ஸ் (BIS)ஆல் சான்றுரைக்கப்பட்டு, இந்த திட்டத்தின் கீழ் வைப்பாக ஏற்கப்பட்டு, மீட்கப்பட்டும் தங்கத்தை கையாளும் நோக்கத்திற்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மையங்களைக் குறிக்கும் (CPTC).

  2. குறிப்பிடப்பட்ட வங்கி:- இத்திட்டத்தை அமல்படுத்த தீர்மானித்துள்ள அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (ஊரக வங்கிகள் நீங்கலாக).

  3. தங்க டெபாசிட் கணக்கு:- தங்கத்தின் எடை கிராம்களில் குறிக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட வங்கியில் தொடங்கப்படும் கணக்கு.

  4. நடுத்தர மற்றும் நீணடகால அரசுவைப்பு (MLTGD):- தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட வங்கியில் இந்திய அரசின் கணக்கில் இருப்பாக தங்கத்தை வைத்துப் பராமரிக்கும் கணக்கு. 5 முதல் 7 ஆண்டுகள் வைத்திருக்கும் கணக்கு நடுத்தரகாலக் கணக்கு. 12 முதல் 15 ஆண்டுகள் வைத்திருக்கும் கணக்கு நீண்டகால வைப்புக் கணக்கு. இந்த கால ஆண்டு வரம்புகள் மத்திய அரசால் அவ்வப்போது தீர்மானித்து அறிவிக்கப்படும்.

  5. நியமிக்கப்பட்ட வங்கி:- நடப்பிலுள்ள அயல்நாட்டு வர்த்தகக் கொள்கையின் படி தங்கத்தை இறக்குமதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரமளிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட வணிக வங்கி.

  6. சுத்திகரிப்பாளர்கள்:- தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட, மீட்கப்பட்ட தங்கத்தைக் கையாளும் நோக்கத்திற்காக தேசீய சோதனை மற்றும் அளவீடு சோதனைச்சாலையால்(NABL) சான்றுரைக்கப்பட்டு, இந்தி அரசால் குறிப்பிடப்பட்ட சுத்திகரிப்பாளர்கள்.

  7. திட்டம்:- சீரமைக்கப்பட்ட தங்க டெபாசிட் திட்டம் (R-GDS) மற்றும் சீரமைக்கப்பட்ட தங்க உலோகக் கடன் திட்டம் (R-GML) ஆகியவற்றை உள்ளடக்கிய தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்.

  8. குறுகியகால வங்கி வைப்பு (STBD):- இத்திட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்ட வங்கியில் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும் தங்க டெபாசிட்டு.

பகுதி – II
சீரமைக்கப்பட்ட தங்க டெபாசிட் திட்டம் (R-GDS)

2.1 அடிப்படை அம்சங்கள்:-

2.1.1 பொதுவானவை

  1. இத்திட்டம் நடப்பிலுள்ள தங்கவைப்புத் திட்டம் 1999-க்குப் பதிலாக அமலாக்கம் செய்யப்படுகிறது. ஏற்கனவே பழைய திட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வைப்புகளை வைப்புதாரர்கள் முதிர்வுக்கு முன்ன தாக எடுத்தாலன்றி, தொடர்ந்து நடப்பிலுள்ள அறிவுறுத்தல்களின்படி அவை தொடர்ந்திடும்.

  2. குறிப்படப்பட்ட அனைத்து வங்கிகளும் இத்திட்டத்தை அமல்படுத்தத் தகுதியானவை.

  3. இத்திட்டத்தின் கீழ் வைப்பின் அசல் மற்றும் வட்டி தங்கத்திலே குறிக்கப்படும்.

  4. இந்தியாவில் வாழும் தனிநபர்கள், இந்து கூட்டுக்குடும்ப அமைப்புகள், அறக்கட்டளை நிறுவனங்கள் மற்றும் SEBI-யின் சகாய பரஸ்பர நிதி நெறிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட பரஸ்பர சகாயநிதி / செலாவணி மாற்று நிறுவன நிதி அமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் வைப்புகளைப் போடமுடியும். நபர்கள் கூட்டாகவும் இணைந்து இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அப்போது முதலீட்டுத் தொகை கூட்டுக் கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கிக் கணக்குகளை கூட்டாக சேர்ந்து செயல்படுத்துதல் மற்றும் வாரிசு நியமனம் தொடர்பாக நடப்பிலுள்ள விதிகள் இந்த தங்க டெபாசிட் திட்ட முதலீடுகளிலும் தொடர்ந்திடும்.

  5. தங்க வைப்புகள் CPTC தூய்மைப் பரிசோதனை மற்றும் தர அளவீட்டு மையங்களில் செய்யப்படும். இருப்பினும் தன்னிச்சையாக, அதிக அளவில் செய்யப்படும் முதலீடுகளை, குறிப்பிடப்பட்ட சில கிளைகளில் வங்கிகள் நேரிடையாகவும் பெறலாம்.

  6. சுத்திகரிப்பு மற்றும் தர அளவீடு சோதனைச் சாலைகளில் தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்பட்டு, அது வர்த்தகத்திற்குரிய தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்ட நாள் அல்லது சோதனை சாலைகளில் வைப்புத் தங்கம் பெறப்பட்டதிலிந்து 30 நாட்கள் கழித்து அல்லது வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் தங்கம் பெறப்பட்ட நாள் இந்த மூன்றில் எது முந்தியதோ அந்தக் குறிப்பிட்ட நாளிலிருந்து தங்க வைப்பின் மீதான வட்டி கணக்கிடப்படும்.

  7. பரிசோதனைச் சாலை CPTC / குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளை ஆகியவற்றில் தங்கம் அளிக்கப்பட்ட நாளிலிருந்து, மேற்கூறியபடி வட்டி கணக்கிட ஆரம்பிக்கப்படும் நாள் வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் வைப்பிற்காக கொடுக்கப்பட்ட தங்கம் அந்த வங்கியிடம் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும்.

  8. தங்க வைப்பின் மீதான வட்டி எந்த நாளிலிருந்து தொடங்குகிறதோ, அந்த நாளில் தங்க வைப்பின் மதிப்பு கணக்கிடப்படும். லண்டன் சந்தை நேரக் கணக்கின்படி, அந்த நாளின் அந்நேர சந்தை நிலவரப்படி, தங்கம் / அமெரிக்க டாலர் / ரூபாய் இவற்றிற்கிடையிலான செலாவணி மாற்று மதிப்பு கணக்கிடப்பட்டு, வைப்பின் மதிப்பு குறித்து வைக்கப்படும். நடப்பிலுள்ள இறக்குமதி தங்கத்திற்குரிய சுங்கவரியும் அத்துடன் சேர்க்கப்பட்டு வைப்புத் தங்கத்தின் மதிப்பு கணக்கிடப்படும். இத்திட்டத்தின் கீழ் வைப்பாக அளிக்கப்படும் தங்கத்தின் மதிப்பும், பின்னர் தேவைப்படும் நாட்களில் தங்கத்தின் மதிப்பும் இந்திய ரூபாயில், மேற்குறிப்பிட்ட முறையிலேயே மதிப்படப்பட்டு குறிப்பிடப்படும்.

  9. அறிக்கை அளித்தல்: குறிப்பிடப்பட்ட வங்கிகள் குறிப்பிட்ட படிவத்தில், தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ், ஒரு மாதாந்தர அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அளித்திடவேண்டும்.

2.1.2 வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்

  1. இத்திட்டத்தின் கீழ் ஒருமுறை, ஒரு நேரத்தில் குறைந்தபட்சம் 30 கிராம் உலோகத் தங்கம் (கட்டிகள், நாணயங்கள், ஆபரணங்கள் {கல், இதர உலோகம் நீங்கலாக}) டெபாசிட்டாக அளிக்கலாம்.

  2. பரிசோதனை மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்டாலும் அல்லது குறிப்படப்பட்ட வங்கிக் கிளைகளில் அளிக்கப்பட்டாலும் அனைத்துத் தங்க வைப்புகளும் CPTC-யில் மட்டுமே சுத்தப்படுத்தப்பட்டு தர மதிப்பீடு செய்யப்படும்.

2.2 வைப்புகளின் வகை

இத்திட்டத்தின் கீழ் இருவகையான டெபாசிட்டுகள் உண்டு.

2.2.1 குறுகியகால வங்கி டெபாசிட் (STBD)

  1. மேலே பத்தி 2.1-ல் குறிப்பிடப்பட்டவை அனைத்தும் இந்த டெபாசிட்டுக்குப் பொருந்தும்.

  2. குறிப்பிடப்பட்ட வங்கிகளில் ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை போடப்படும் டெபாசிட் குறுகியகால டெபாசிட் (அவை மீண்டும் ஒரு ஆண்டுக்கு மேல் புதுப்பிக்கப்படலாம்) வங்கியின் நிதிநிலை அறிக்கையில் கடன் பொறுப்பாக இது காட்டப்படும்.

  3. டெபாசிட்டில் தங்கம் வரவு வைக்கப்பட்ட நாளிலிருந்து வங்கியின் பொறுப்புகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் CRR, SLR தேவைகளுக்கு இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நடப்பிலுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலகளுக்கேற்ப, இவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எவ்வாறாயினும், வங்கியின் புத்தகக் கணக்கில் இத்திட்டத்தின் கீழ் உள்ள தங்க இருப்பு, SLR தேவைகளுக்காக இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய சுற்ற்றிக்கை – CRR மற்றும் SLR (1 ஜூலை 2015-ன்படி)-யில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களின்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

  4. குறைந்தபட்ச முடக்கப்பட்ட காலம், அபராதம் ஆகிய கட்டளைகளுக்கு உட்பட்டு, குறிப்பிடப்பட்ட வங்கிகள் தம் விருப்புரிமையின் பேரில், பகுதியளவிலோ, முழுமையாகவோ தங்க டெபாசிட்டை முதலீட்டாளர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாம்.

  5. குறிப்பிடப்பட்ட வங்கிகள் இந்த டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதத்தை தாங்களே தீர்மானிக்கலாம். டெபாசிட்டுகள் மீதான வட்டி கெடுவுக்கு உரிய தேதிகளில் வரவு வைக்கப்பட்டு விடும். அவ்வப்போதோ அல்லது முதிர்வுத் தேதியிலோ டெபாசிட்டுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவை எடுக்கப்படலாம்.

  6. தங்க டெபாசிட்டுகளின் அசல் மற்றும் வட்டியை முதிர்வின்போது டெபாசிட் செய்தவரின் விருப்பத்திற்கிணங்க, டெபாசிட் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பிற்கு ஈடாக (முதிர்வின்போது நிலவும் தங்க விலையின் அடிப்படையில்) இந்திய ரூபாயிலோ அல்லது தங்கமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இதற்கான விருப்புரிமையை டெபாசிட் செய்யும்போதே வைப்புதாரர் தெரிவித்துவிடவேண்டும். அதைப் பின்னர் மாற்ற முடியாது. ஆனால், முதிர்வுக்கு முன்னதாக டெபாசிட்டை திரும்பப் பெற ஒரு வைப்புதாரர் விரும்பினால், அதைத் தங்கமாகவோ, பணமாகவோ தரும் விருப்புரிமை வங்கியின் வசமே உள்ளது.

2.2.2 நடுத்தரகால மற்றும் நீண்டகால அரசுவைப்பு (MLTGD)

  1. மேலே பத்தி 2.1-ல் குறிப்பிட்ட அனைத்து வழிகாட்டுதல்களும் இந்த டெபாசிட்டுக்கும் பொருந்தும்.

  2. மத்திய அரசின் சார்பில் குறிப்பிடப்பட்ட வங்கிகள் இந்த வகையான டெபாசிட்டுகளை ஏற்றுக்கொள்கின்றன.

  3. குறிப்படப்பட்ட வங்கிகளின் நிதிநிலை அறிக்கையில் இந்த டெபாசிட்டுகள் இடம்பெறாது. இது மத்திய அரசின் கடன்பொறுப்பாகும். மத்திய அரசு தீர்மானிக்கும் வகையில், டெபாசிட்டுதாரருக்குத் திருப்பித் தரப்படும்வரை இந்த டெபாசிட்டுகளை குறிப்பிடப்பட்ட வங்கிகள் மத்திய அரசின் சார்பில் இவற்றை தம்வசம் வைத்திருக்கும்.

  4. அவ்வப்போது மத்திய அரிசு தீர்மானிக்கும் வகையில், நடுத்தரகால டெபாசிட் என்பது ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கும், நீண்டகால டெபாசிட் என்பது 12 முதல் 15 வருடங்களுக்கும் செய்யப்படலாம். இந்த டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதம் மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது அறிவிக்கப்படும். மத்திய அரசு தீர்மானிக்கும் முடக்கப்பட்ட காலம், அபராதம் ஆகியவற்றிற்கு உட்பட்டு, டெபாசிட்டுகளை முதிர்வுக்கு முன்பாக முழுவதுமாகவோ, பகுதியாகவோ எடுத்தவிட குறிப்பிடப்பட்ட வங்கிகள் அனுமதி அளிக்கலாம்.

  5. டெபாசிட்டை அசல் மற்றும் வட்டியுடன் இந்திய ரூபாயில் (டெபாசிட்டைத் திரும்பப் பெறும் நேரத்தில் தங்கத்தின் மதிப்பைப் பொறுத்து டெபாசிட் மதிப்பு மற்றும் அதன்மீது சேகரமாகும் வட்டி கணக்கிடப்படும்) மட்டுமே திருப்பி அளிக்கப்படும்.

  6. MLTGD திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தங்கம், அரசு அறவித்துள்ள முகவர்களால் ஏலம் விடப்படும். அந்த ஏலத்தில் கிடைத்த தொகை, இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள இந்திய அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

  7. தங்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தங்க டெபாசிட் கணக்குகளை குறிப்பிடப்பட்ட வங்கிகளின் பேரில் இந்திய ரிசர்வ் வங்கி பராமரித்திடும். அந்த குறிபிடப்பட்ட வங்கிகள் தனித்தனியே டெபாசிட்தாரர்களின் பேரில் தங்க வைப்புக் கணக்குகளைப் பராமரிக்கும்.

  8. ஏலம் விடுதல் மற்றும் கணக்குகளை பராமரித்தல் தொடர்பான நடைமுறைகளை இந்திய அரசு அறிவிக்கும்.

2.3 தங்க டெபாசிட் கணக்குகளைத் தொடங்குதல்

எல்லாவகையான டெபாசிட்டுகளில் உள்ள விதிமுறைகள் போலவே தங்க டெபாசிட் திட்டத்திற்கும் ‘வாடிக்கையாளர் அடையாள சான்றாவணங்கள்’ குறித்த விதிமுறைகள் அமைந்திடும். தங்க டெபாசிட் செய்ய விரும்பும் நபர், குறிப்பிடப்பட்ட வங்கியில் கணக்கு ஏதும் வைத்திருக்காவிட்டால், தங்கத்தை CPTC மையங்களில் கொடுப்பதற்கு

முன்பாக, இந்திய ரிசர்வ் வங்கி கூறும் “வாடிக்கையாளரை அறிவீர்” நடைமுறைகளைப் பூர்த்தி செய்து, வங்கியில் நிலுவை ஏதுமின்றி கணக்கைப் புதிதாகத் தொடங்கலாம்.

CPTC மையங்களிலிருந்து பெறப்படும் குறிப்பில் காட்டப்படும் 995 தூய்மை தங்கத்தின் எடையு.ம் மதிப்பும் STBD / MLTGD (குறுகிய கால / நடுத்தரகால / நீண்டகால வைப்பாக) குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். CPTC-யில் தங்கம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு, டெபாசிட் சான்றிதழை வைப்புதார்ர் வங்கிக்கு கொடுக்காதபோதிலும், இவ்வாறு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

2.4 சேகரிப்பு மற்றும் தூய்மைப் பரிசோதனை மையங்கள்

  1. இத்திட்டத்தின் கீழ் தங்கத்தின் தூய்மையைப் பரிசோதிக்க BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிடும்.

  2. இந்தப் பட்டியலில் இல்லாத CPTC-ஐயும், அவர்களின் கடன் பெறுமானத்தை மதிப்பீடு செய்து, தங்க டெபாசிட் பெறுவதற்கு தங்களின் முகவர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வங்கிகளுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது (வங்கிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் CPTC-க்களுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தம் குறித்த பத்தி 2.6-ப் பார்க்கவும்).

  3. CPTC பட்டியலில் உள்ள ஒரு மையத்தை வங்கி தேர்ந்தெடுக்கும்போது, அந்த மையம் விளம்பரம் செய்து, பலகையில் காட்டும் வங்கிகளின் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி தனது பெயரும் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

  4. CPTC பட்டியலில் உள்ள மையம், தான் விதிக்கும் கட்டணங்களின் விவரங்களை தனது அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் தெரியும்படியாக வெளியிடவேண்டுவது அவசியமாகும்.

  5. CPTC மையத்தில் உலோகத் தங்கத்தை டெபாசிட் செய்யும் முன்பாக, முதலீட்டாளர், தான் எந்த வங்கியில் அதை டெபாசிட்செய்ய விரும்புகிறார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும்.

  6. முதலீட்டாளர் அளிக்கும் உலோக தங்கத்தை உருக்கி சோதித்தறிந்தபின், 995 தூய்மையான தங்கத்தின் எடையைக் குறிப்பிட்டு, CPTC-யின் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் கையொப்பமிடப்பட்ட ஒரு ரசீது முதலீட்டாளருக்கு அளிக்கப்படும். அதே நேரத்தில், முதலீட்டாளர் குறிப்பிடும் வங்கிக்கும், தங்கத்தை டெபாசிட்டாக பெற்றுக் கொண்டமைக்கான ஒரு விவரக் குறிப்புச் சீட்டை CPTC அனுப்பி வைத்திடும்.

  7. CPTC தங்கத்தைப் பரிசோதித்தபின் தரும் 995 தூய தங்கத்தின் எடை குறித்த விவரக் குறிப்பு அதன் தரம் என்பது முடிவான ஒன்றாகும். சுத்திகரிப்பு காரணத்தாலோ, வேறு ஏதாவது காரணத்தாலோ CPTC அளித்த ரசீதில் குறிப்பிடப்படுள்ள தங்கத்தின் தரம் மற்றும் எடை குறித்த விவரங்களில் டெபாசிட்தாரர், குறிப்பிபடப்பட்ட வங்கி ஆகிய மூன்று தரப்பினருக்கிடையே சர்ச்சை எழுமானால், அது, அந்த முத்தரப்பினரிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்.

  8. தங்கத்தை டெபாசிட் செய்தபின், CPTC வங்கிக்காக அளித்த ரசீதை (995 தங்கத்தின் தரம், எடை குறிப்பிட்ட) டெபாசிட்தாரர் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பி வைத்திடவேண்டும்.

  9. டெபாசிட்தாரர் டெபாசிட் ரசீதை அளித்தபின், குறிப்பிட்ட வங்கி, இறுதியான டெபாசிட் ரசீதை அதேநாளிலோ அல்லது தங்கத்தை CPTC-யில் கொடுத்த நாளிலிருந்து 30 நாட்கள் கழித்தோ (எது பிந்தியதோ அந்த தேதியிட்டு) வெளியிடும்.

  10. தங்கத்தை சுத்திகரிப்பு செய்து தர அளவீடு செய்யும் செயல்முறை பின்னிணைப்பு-1 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

2.5 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தங்கத்தை மாற்றுதல்

  1. வங்கிகள், சுத்திகரிப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் எந்த ஒரு மையத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

  2. முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள கட்டளைகளின் அடிப்படையில், CPTC-க்கள் தங்கத்தை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்திடும்.

  3. குறிப்பிடப்பட்ட வங்கியின் தீர்மானத்தின பேரில், சுத்தம் செய்யப்பட்ட தங்கம், பரிசோதனை மையங்களிலோ அல்லது வங்கியிலோ பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும்.

  4. பரஸ்பரம் தீர்மானத்தபடி, குறிப்பிடப்பட்ட வங்கிகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அவர்களின் சேவைகளுக்காக கட்டணம் அளித்திடும்.

  5. சுத்திகரிப்பு நிறுவனங்கள் டெபாசிட்தாரரிடமிருந்து எந்த கட்டணத்தையும் வசூலிக்காது.

2.6 குறிப்பிடப்பட்ட வங்கி, சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் CPTC-களுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம்

  1. ஒவ்வொரு குறிப்பிடப்பட்ட வங்கியும், சுத்திகரிப்பாளர் மற்றும் இத்திட்டத்தின் கீழ் பிணைப்பில் உள்ள CPTC-யுடன் சட்டத்திற்கு உட்பட்டதான ஒரு முத்தரப்பு உடன்படிக்கையை ஏற்படுத்திடவேண்டும்.

  2. கட்டணங்கள் அளித்தல், ஆற்றப்படவேண்டிய சேவைகள், சேவைகளின் தரம், தங்கம் எங்கிருந்து எங்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படவேண்டும்.

2.7 தங்க டெபாசிட் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தங்கத்தின் பயன்பாடு

2.7.1 (STBD) (குறுகியகால நிதி) வைப்பின் கீழ் ஏற்கப்பட்ட தங்கம், குறுகியகால நிதி வைப்பாக ஏற்கப்பட்ட தங்கத்தின் பொதுவான பயன்பாட்டிற்கு பாதகம் ஏதுமின்றி குறிப்பிடப்பட்ட வங்கிகள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

  1. இந்திய அரசின் தங்க நாணயங்களை அச்சடிக்க, MMTC-க்கு நாணயங்களை விற்கலாம். மேலும் தங்க ஆபரண வியாபாரிகளுக்கும் மற்றும் தங்க டெபாசிட் திட்டத்தில் பங்கேற்கும் வங்கிகளுக்கும் விற்கலாம்.

  2. தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ், இந்திய அரசு நாணயச் சாலைகளுக்கு நாணயம் அடிக்கவும், தங்க நகை வியாபாரிகளுக்கும் கடனாக தங்கத்தைக் கொடுக்கலாம்.

2.7.2 MLTGD-யின் கீழ் ஏற்கப்பட்ட தங்கம்

  1. MLTGD-யின் கீழ் டெபாசிட்டாக பெறப்பட்ட தங்கம் MMTC அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு முகமை மூலம் ஏலம் விடப்படலாம். ஏலத்தினால் பெற்ற தொகை இந்திய ரிசர்வ் வங்கியிடம் பாரமரிக்கப்படும். மத்திய அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

  2. இந்த தங்க ஏலத்தில் RBI, MMTC, வங்கிகள் மற்றும் மத்திய அரசு இது தொடர்பாக அறிவிக்கும் இதர அமைப்புகள் பங்கேற்கலாம்.

  3. குறிப்பிடப்பட்ட வங்கிகள் இந்த ஏலத்தில் பங்கேற்று வாங்கிய தங்கத்தை மேலே 2.7.1-ல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2.8 நேரிடர் மேலாண்மை

  1. குறிப்பிடப்பட்ட வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள வழிகாட்டுதல்களுகுட்பட்டு, சர்வதேச சந்தைகள், லண்டன் தங்க சந்தை வர்த்தகத் தொடர்புகள் அல்லது OTC ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி, தங்கவிலை மாற்றங்களால் விளையும் நஷ்டத்திற்கு எதிராக காப்பு செய்து கொள்ளலாம்.

  2. குறிப்பிடப்ட்ட வங்கிகள், தமது நிகர தங்க வர்த்தக மதிப்பை கவனத்தில் கொண்டு, தங்கத்தின் விலை மாற்றங்களால் ஏற்படும் நேரிடரை மேலாண்மை செய்திட, ஒரு முறைமையை வகுத்திடலாம். இதற்காக குறிப்பிட்ட வரம்புகளையும் அவை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

2.9 CPTC மையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மேற்பார்வை

  1. CPTC மையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் பின்பற்றவேணடிய தரநிலைப்படிகளை அவைகள் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதிசெய்திட BIS, NABL, RBI மற்றும் IBA யுடன் இணைந்து கலந்தாலோசனை செய்து, மத்திய அரசு இவற்றின் மேற்பார்வைக்கான ஒரு முறைமையை உருவாக்கிடவேண்டும்.

  2. CPTC மற்றும் சுத்திகரிப்பாளர்கள் மத்திய அரசின் தரநிலைகளை பின்பற்றாவிடில் மத்திய அரசு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

  3. CPTC-க்களுக்கு எதிராக டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்கள் அளிக்கும் புகார்களை தீர்வு செய்ய உரிய ஒரு அமைப்பினை மத்திய அரசு உருவாக்கிட வேண்டும்.

  4. ரசீது அளித்தல், டெபாசிட் சான்றாவணம் அளித்தல், தங்க டெபாசிட்டுகளைத் திருப்பித்தருதல், வட்டி அளித்தல் போன்றவற்றில் குறைபாடுகள் தொடர்பாக குறிப்பிட்ட வங்கிகள் மீது புகார்கள் எழுமானால், அவை முதலில் வங்கியின் புகார் தீர்வு மையத்தால் தீர்க்கப்படும், இல்லையேல், அது இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கிக் குறைதீர்ப்பாளரால் கையாளப்படும்.

பகுதி - III

தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்
இதனுடன் இணைந்த தங்க உலோகக் கடன் திட்டம்

3.1.1 பொதுவானவை

  1. STBD-யின் கீழ் பெறப்பட்ட தங்கம், தங்க நகை வியாபாரிகளுக்கு தங்க உலோகக் கடனாக அளிக்கப்படலாம். குறிப்பிடப்பட்ட வங்கிகள் MLTGD-யின் கீழ் எலம் விடப்பட்ட தங்கத்தை வாங்கி, தங்க நகை வியாபரிகளுக்கு கடனாக அளிக்கலாம்.

  2. தங்கநகை வியாபாரிகள், சுத்திகரிப்பு நிலையம் அல்லது வங்கி (எங்கே தூய்மைப்படுத்தப்பட்ட தங்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளதோ)-யிடமிருந்து தங்கத்தை நேரிடையாகப் பெறலாம்.

  3. ஜூலை 01, 2015 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக்கடன் தொடர்பான முக்கிய மூலச் சுற்றறிக்கையின் பத்தி எண் 2.3.12-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளால் பின்பற்றப்படும் நடப்பிலுள்ள தங்க உலோகக் கடன் திட்டமானது GMS தங்க உலோகக் கடன் திட்டத்துடன் சரிசமமாகத் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நடப்பிலுள்ள GML திட்டத்திற்கு பொருந்தக்கூடிய, அவ்வப்போது திருத்தியமைக்கப்படும் விவேக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்கள், இந்தப் புதிய திட்டத்திற்கும் பொருந்தும்.

  4. STBD-யின் கீழ் பெறப்பட்ட தங்க வைப்புகளைத் திருப்பித் தருவதற்காக மட்டுமே குறிப்பிடப்பட்ட வங்கிகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் தவிர) தங்கத்தை இறக்குமதி செய்யத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

3.1.2 வசூலிக்கப்படும் வட்டி

தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தில் தொடர்புடைய தங்க உலோகக் கடன் மீதான வட்டியை, குறிப்பிடப்பட்ட வங்கிகளே தீர்மானிக்கலாம்.

3.1.3 கடனின் காலம்

நடப்பிலுள்ள தங்க உலோகக் கடன் திட்டத்தில் உள்ளதுபோலவே GMS தொடர்புடைய GML–ன் காலம் இருக்கும்.

ஒப்பம் /- ராஜிந்தர் குமார்
முதன்மை தலைமை பொதுமேலாளர்


பின்னிணைப்பு ANNEX – I

CPTC-யில் தங்கத்தை உருக்கித் தூய்மையாக்கும் முறை

i. XRF பரிசோதனைக்கு முன்னர், CPTC வசூலிக்கும் கட்டணம் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படும்.

ii. டெபாசிட் செய்யப்படவுள்ள தங்கத்தை உருக்கவும், பரிசோதித்துத் தூய்மைப்படுத்தவும் BIS சில முறையான படித்தள செயல்முறைகளை வகுத்துள்ளது.

  1. XRF இயந்திரப் பரிசோதனையில், கொடுக்கப்பட்ட அனைத்து தங்க ஆபரணங்களை முதலில் வாடிக்கையாளர் முன்னிலையில் எடை போடவேண்டும். அது CCTV காமிராவில் படமெடுத்து பதிவில் வைக்கப்படும்.

  2. XRF பரிசோதனைக்குப் பின்னர், முதல்கட்ட பரிசோதனையின் முடிவில் வாடிக்கையாளருக்கு கருத்து மாறுபாடு இருக்கலாம். அப்போது அவர் டெபாசிட் செய்யும் முடிவிலிருந்து விலகலாம். அல்லது கொடுக்கப்பட்ட தங்கத்தை உருக்கி பரிசோதனையைத் தொடர அனுமதி அளிக்கலாம்.

  3. வாடிக்கையாளர் உருக்கிப் பரிசோதிக்கும் முறைக்கு அனுமதி அளித்ததும், தங்க ஆபரணங்களில் உள்ள அழுக்கு, மாசு ஆகியவை முதலில் நீக்கப்படும். பின்னர், அதன் தூய்மைநிலை வாடிக்கையாளர் முன்னிலையிலேயே சோதித்து அறியப்படும்.

  4. தணலில் உருக்கி தூய்மை நிலை அறிவிக்கப்பட்டதும், வாடிக்கையாளர் அதை ஒத்துக் கொண்டு, வங்கியில் தங்கத்தை டெபாசிட் செய்ய முடிவெடுக்கலாம். அவ்வாறு வாடிக்கையாளர் முடிவெடுத்தால், பரிசோதனைக்கான கட்டணம் வங்கியால் அளிக்கப்படும். ஒருவேளை வாடிக்கையளர் இறுதிகட்ட பரிசோதனை முடிவினை ஒத்துக் கொள்ளாவிடில், தங்கம் அவரிடம் திருப்பித் தரப்படும். அப்போது ஒரு சிறு கட்டணம் அவரிடம் வசூலிக்கப்படும்.

  5. வாடிக்கையாளர் தங்கத்தை டெபாசிட் செய்யமுடிவெடுத்தால், CPTC, அவர் கொடுத்த தங்கம் பரிசோதனைக்குப் பின் உள்ள 995 தூய்மை நிலையில் அதன் எடை விவரத்தைக் குறிப்பிடப்பட்டு ஒரு சான்றிதழ் அளிக்கப்படும்.

  6. வாடிக்கையாளர் அந்த சான்றிதழை, டெபாசிட் செய்யும் வங்கியில் கொடுத்தவுடன், வங்கி அவரது டெபாசிட் கணக்கில் 995 தூய்மையான தங்கத்தின் எடையளவிற்கு மதிப்பினை வரவு வைத்திடும்.

  7. CPTC-யும் இதே நேரத்தில், தங்கப் பரிசோதனைக்குப் பின்னர் வாடிக்கையாளர் செய்துள்ள தங்க டெபாசிட் குறித்த விவரங்களை வங்கிக்குத் தெரிவிக்கவேண்டும்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்