Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (151.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/10/2015
தங்க பத்திரங்கள் 2015-16

RBI/2015-16/218
IDMD.CDD.No.939/14.04.050/2015-16

அக்டோபர் 30, 2015

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(ஊரக வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்

தங்க பத்திரங்கள் 2015-16

இந்திய அரசு அறிவிப்பு எண் F.No. 4 (19)-W&M2014, அக்டோபர் 30, 2015 தேதியிட்டதில் தெரிவித்துள்ளபடி, தங்கப்பத்திரங்கள் 2015-ஐ (பத்திரங்கள்) நவம்பர் 05, 2015 முதல் நவம்பர் 20, 2015 வரை வெளியிடுவதாக முடிவு செய்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே, முன்னறிவிப்பின் பேரில் அரசு இத்திட்டத்தை முடிக்கவும் கூடும். இத்திட்டத்தின் கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் பின் வருமாறு.

1. முதலீட்டிற்கான தகுதி

பத்திரங்களை இந்தியாவில் குடியிருக்கும் நபர், தனியாளாகவோ, மைனரின் சார்பிலோ அல்லது மற்றொருவருடன் இணைந்தோ வாங்கி இவற்றில் முதலீடு செய்யலாம். இந்தியாவில் குடியிருக்கும் நபர் என்பதற்கான விளக்கம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999-ல் சட்டப்பிரிவு எண் 2(v) மற்றும் 2(u)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. பத்திரத்தின் வடிவம்

அரசுப் பத்திரங்கள் சட்டம் 2006-ன் சட்டப்பிரிவு எண் 3 ல் கூறியுள்ளபடி, அரசுப் பத்திரங்களின் வடிவிலேயே தங்க பத்திரங்கள் வெளியிடப்படும். வைப்புரிமைச் சான்றிதழ் படிவம் முதலீட்டாளருக்கு அளிக்கப்படும். அவை காகித வடிவிலில்லா கணக்கில் மாற்றத் தகுதியுடையது.

3. வெளியீட்டு தேதி

பத்திரம் வெளியிடப்படும் தேதி நவம்பர் 26, 2015.

நவம்பர் 05, 2015-லிருந்து நவம்பர் 20, 2015 வரை, முதலீட்டாளர்கள் இந்தப் பத்திரங்களுக்குரிய அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பெறலாம். நவம்பர் 20, 2015-ற்கு முன்னதாகவே இந்திய அரசு அளிக்கும் முன்னறிவிப்பின் பேரில் இந்த வெளியீடு முடிக்கப்படலாம்.

4. மதிப்பிலக்கம்

பத்திரங்கள் மதிப்பீடு 1 கிராம் தங்கத்தின் விலையாக தொடங்குகிறது. குறைந்தபட்ச முதலீடு ஒரு நபருக்கு ஒரு நிதியாண்டில் 2 கிராம் தங்கம். அதிகபட்சம் 500 கிராம் தங்கம். கூட்டு முதலீடானால், (ஒரு நபருக்கு மேல் என்றால்) இந்த உச்சவரம்பு முதல் முதலீட்டாளருக்குப் பொருந்தும்.

5. வெளியீட்டு விலை

பத்திரங்களின் விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்படும். 999 தூய்மையான தங்கத்தின் முடிவு விலையாக இந்தியா புல்லியன் அன்ட் ஜுவல்லர்ஸ் அஸோஸியேஷன் லிமிடெட் – IBJA, முந்தைய வாரத்தில் (திங்கள் முதல் வெள்ளிவரை) வெளியிட்ட விலையின் சராசரி, தங்கப் பத்திரத்தின் தங்க மதிப்பீட்டு விலையாக நிர்ணயிக்கப்படும்.

6. வட்டி விகிதம்

பத்திரத்தின் தொடக்க நிலை முதலீட்டுத் தொகையில் 2.75 விழுக்காடு (நிலையான விகிதம்) வட்டி வழங்கப்படும். வட்டி, அரையாண்டுக்கொருமுறை அளிக்கப்படும். கடைசி தவணை வட்டியானது, பத்திரம் முதிர்வடையும் போது அசல் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.

7. முதலீட்டைப பெறும் அலுவலகங்கள்

பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (ஊரக வங்கிகள் நீங்கலாக) மற்றும் சில குறிப்பிடப்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் இந்த தங்கப் பத்திரங்களுக்கான முதலீட்டு விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன.

8. பணம்செலுத்தும் வழிமுறைகள்

இந்தப் பத்திரங்களுக்கான தொகை பணமாகவோ, வரைவோலை / காசோலை முலமாகவோ அல்லது மின்னணு நிதி மாற்றம் மூலமாகவோ செலுத்தப்படலாம். வரைவோலை அல்லது காசோலை மேலே குறிப்பிடப்பட்டபடி எந்த வங்கி / அஞ்சலகத்தில் செலுத்தப்பட உள்ளதோ அதன் பெயரில் அளிக்கப்படும்.

9. முதலீட்டை மீட்டெடுத்தல்

  1. பத்திரங்களின் முதிர்வுகாலம் என்பது வெளியீட்டு நாளிலிருந்து எட்டு ஆண்டுகளாகும். எனினும், வெளியீட்டுத் தேதியிலிருந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கியபின், முதலீட்டுத் தொகையை, வட்டி வழங்கப்படும் தேதிகளில் ஒருவர் முதிர்வுக்கு முன்னரே திரும்பப்பெறலாம்.

  2. இந்திய புல்லியன் அன்ட் ஜுவல்லர்ஸ் அஸோஸியேஷன் லிமிடெட் – IBJA-ஆல் வெளியிடப்படும் 999 தூய்மையான தங்கத்தின் கடந்த வார (திங்கள் முதல் வெள்ளி வரை) முடிவு விலையின் சராசரி விலையில் முதிர்வுத்தொகை திருப்பித் தரப்படும்.

10.திருப்பித்தருதல்

முதலீட்டைப்பெறும் அலுவலகங்கள், முதிர்வு நாளுக்கு ஒரு மாதம் முன்னதாக முதிர்வு குறித்து முதலீட்டாளர்களுக்குத் தகவல் அளித்திடும்.

11. SLR-க்கு தகுதி (சட்டப்பூர்வ நீர்ம விகிதம்)

இந்தப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகள் SLR-க்கு தகுதியானவை.

12. பத்திரங்களை அடமானம் வைத்துக் கடன்

பத்திரங்களை கடன்களுக்கு இணைப் பிணையமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் கடன்/ அடமான விகிதம் என்பது, தங்க நகைக் கடனில் உள்ளது போலவே, அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கும் விதத்தில் அமைந்திடும். அதிகாரபூர்வ வங்கிகள் தங்களின் அடமானப் பத்திரப்பதிவேடுகளில் இந்த அடமானப் பதிவினைக் குறித்து வைத்திடும்.

13. வரி விதிப்பு

பத்திர முதலீடுகளின் மீதான வட்டி வருவாய், வருமானவரிச் சட்டம் 1961-ன்படி வரி விதிப்பிற்குள்ளாகும். தங்கத்தின் மீதான மூலதன வரி போலவே, மூலதன லாப வரி விதிப்பு (capital gains Tax) இதற்கும் உண்டு.

14. விண்ணப்பம்

பத்திர முதலீட்டிற்கான விண்ணப்பம், குறிப்பிட்ட விண்ணப்பப்படிவம் (Form “A”) அல்லது அதிலுள்ளது போன்றே விவரங்கள் அடங்கிய வகையில், பெயர், முகவரி முதலீடு செய்யவிருக்கும் தங்கத்தின் எடை (கிராம்களில்), ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டு அளிக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தைப் பெறும் அலுவலகம் இதற்கான ஒரு ஒப்புகையை (படிவம் “B”) விண்ணப்பதாரருக்கு அளிக்கும்.

15. நியமனம்

அரசுப் பத்திரச் சட்டம் 2006-ல் (பிரிவு 38) மற்றும் அரசுப் பத்திர நெறிமுறைகள் 2007 (டிசம்பர் 1, 2007 தேதியிட்ட பகுதி III பிரிவு 4-ல் இந்தி அரசிதழில் வெளியிடப்பட்டது) ஆகியவற்றில் உள்ளபடி, பத்திர முதலீடுகளுக்கான நியமனம் மற்றும் அதை ரத்து செய்தல் முறையே படிவம் ‘D’, படிவம் ‘E’-ல் அளிக்கப்படவேண்டும்.

16. மாற்றத்தக்கவை

அரசுப் பத்திரச் சட்டம் 2006-ல் (பிரிவு 38) மற்றும் அரசுப் பத்திர நெறிமுறைகள் 2007 (டிசம்பர் 1, 2007 தேதியிட்ட பகுதி III பிரிவு 4-ல் இந்தி அரசிதழில் வெளியிடப்பட்டது) ஆகியவற்றில் உள்ளபடி மாற்றத்திற்கான ஒரு ஆவணத்தை (படிவம் ‘F’) உபயோகித்து இந்த பத்திரங்களை மாற்றமுடியும்.

17. வர்த்தகம் செய்யத்தக்கவை

இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிடும் தேதியிலிருந்து இந்த பத்திரங்கள் சந்தையில் வர்த்தகம் செய்ய ஏற்றவையாகும்.

18. பத்திர விற்பனையில் தரகு

முதலீடுகளைப் பெறும் அலுவலகங்களுக்கு கிடைக்கும் விண்ணப்பத்தொகை ரூ. 100-க்கு ரூ.1 வீதம் தரகு அளிக்கப்படும். அதில் 50% முதலீடு வர்த்தகத்தை ஈட்டித்தரும் முகவர்கள் அல்லது துணை முகவர்களுக்கு அளிக்கப்படும்.

19. இந்திய நிதியமைச்சகம் (பொருளாதார விவகாரத்துறை) வெளியிட்டுள்ள அக்டோபர் 8, 2008 தேதியிட்ட F. No. 4 (13) W & M/2008, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இதர கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் இந்த பத்திரங்களுக்கும் பொருந்தும்.

இங்ஙனம்

(சந்தன் குமார்)
துணைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்